பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘நாடோடிகள் 2’ என பல வெற்றி படங்களில் நடித்த இவர், அண்மையில் வெளியான ‘நவரசா’ என்ற வலைதள தொடரிலும் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ராம்சரண் தேஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னணி பொலிவுட் இளம் நடிகை கைரா அத்வானி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை அஞ்சலி, தற்போது அவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதனை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.