செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நீளிரா | திரைவிமர்சனம்

நீளிரா | திரைவிமர்சனம்

3 minutes read

நீளிரா – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஸ்பிரிட் மீடியா

நடிகர்கள் : நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட் ,சித்து குமரேசன், நமச்சிவாயம் தம்பிப்பிள்ளை, ரோஹித் மற்றும் பலர்.

இயக்கம் : சோமிதரன்

மதிப்பீடு : 3.5 / 5

1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எம்முடைய மண்ணில் நடந்த போரின் பின்னணியிலான படைப்பு என வெளியீட்டிற்கு முன்னதாக படக்குழுவினர் அழுத்தமாக முன்னிலைப்படுத்தியதால்… இப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

எம்முடைய மண்ணில் நடைபெற்ற அசலான சம்பவங்கள் என்பதால்… அதனை எவ்வளவு தொலைவிற்கு உண்மைக்கு நெருக்கமாக படைப்பாளி விவரித்திருக்கிறார் என்பதை காண்பதற்காக சென்றவர்களுக்கு எம் மாதிரியான நினைவூட்டல் ஏற்பட்டது என்பதை தொடர்ந்து காண்போம்.

1987-88 களில் எம்மண்ணில் போர் சூழல் சூழ்ந்திருந்த நிலையில்.. யாழ்ப்பாணத்தை சார்ந்த ஒரு எளிய தமிழ் குடும்பம் தங்களது வீட்டு பெண் பிள்ளையை புலம்பெயர்ந்து ஐரோப்பிய தேசத்தில் வாழும் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க அனைத்து ஒருங்கிணைப்புகளையும் முன்னெடுத்து, அதற்கான நிகழ்வுகளில் ஈடுபடுகிறது.

விடிந்தால் திருமணம் என்ற தருணத்தில் இந்திய அமைதிப்படையை சார்ந்த எட்டு இந்திய ராணுவத்தினர் வழி தவறி இந்த திருமண வீட்டிற்கு முன்பாக முகாமிடுகிறார்கள்.

கிளர்ச்சியாளர்கள் அல்லது போராளி குழுக்களால் தாக்குதலுக்கு ஆளாகுவோம் என்பதால் தங்களை தற்காத்துக் கொள்ளவும்… இந்திய அமைதிப்படை தங்களை மீட்கும் வரை தற்காலிக புகலிடமாகவும்.. அந்த திருமண வீட்டிற்குள் அத்துமீறி நுழைகிறது. இந்திய அமைதிப்படையைச் சார்ந்த ராணுவ வீரர்கள்.

அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் பணய கைதியாக்கி, மனித உரிமை மீறலில் ஈடுபட தொடங்குகிறது. போராளி குழுவிற்கு இத்தகவல் கிடைக்க.. அவர்கள் இந்திய அமைதி படை மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்கள்.

இப்படி பரபரப்பான தருணத்தில் அந்த வீட்டில் திருமணம் நடந்ததா? இல்லையா,? போராளி குழுக்களுக்கும், இந்திய அமைதிப்படை ராணுவத்திற்கும் இடையே தாக்குதல் நடந்ததா? இல்லையா? அந்த நீண்ட இரவில் என்ன நடந்தது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

சிங்கள ராணுவத்தினரால் தமிழர்கள் எங்ஙனம் பாதிக்கப்பட்டார்கள்? என்பதை ஈழத்திலிருந்து ஏராளமான இலக்கியவாதிகள் தங்களுடைய படைப்புகளை எழுத்தில் உருவாக்கி.. அதனை சர்வதேசத்தின் பார்வையில் முன் வைத்தனர்.

அது போன்றதொரு முயற்சியை காணொளி வடிவிலும் காட்சி மொழியாகவும் முன் வைத்திருக்கும் முதிர்ச்சி அடையாத இந்த முதல் அனுபவத்தை பாராட்டலாம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு போரை பற்றி ஒரே படைப்பில் வீரியமாக சொல்ல இயலாது என்பது யதார்த்தம் என்றாலும் … எடுத்துக்கொண்ட விடயத்தில் குறுகிய கால அவகாசத்திற்குள் போர் சூழலில் மக்கள் அனுபவித்த விவரிக்க இயலாத துயரங்களை இந்த படைப்பு வீரியமாக வழங்கவில்லை என்றாலும்… நேர்த்தியாக வழங்கியிருக்கிறது. அதற்காகவே மண்ணின் மைந்தனான சோமிதரனை பூங்கொத்து கொடுத்து கை வலிக்க கரம் குலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.

போர் சூழலை தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்ட முன்னாள் ராணுவ வீரரை மூத்த உறுப்பினராக கொண்ட ஒரு குடும்பம்… அந்த வீட்டில் அதிரடியாய் உள்ளே நுழையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரை வரித்துக் கொண்ட எட்டு இந்திய ராணுவ வீரர்கள்….. மக்களின் விடுதலைக்காக போராளிகளாக இயங்கும் குழுவினர்….  இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முன்னாள் ராணுவ வீரரின் குடும்ப உறுப்பினர்கள்…. இப்படி வலிமையான மனித உரிமை மீறலில் ஈடுபடும் கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு பெண்ணின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதைக்குள் அசலான சம்பவங்களை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்குள் ஒரு தாயின் பரிதவிப்பு …போர் சூழலை தங்களுடைய விளையாட்டாக மாற்றி அமைத்துக் கொள்ளும் சிறார்கள்.. இன விடுதலைக்காக மக்களின் உணர்வு ரீதியான ஆதரவு.. என படம் நெடுக போர் சூழலின் பின்னணி – பாதிப்பு – விளைவுகள் – ஆகியவை அழுத்தமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

திரைக்கதையில் எந்த இடத்திலும் எந்த சார்பு நிலையிலும் சாராமல்.. இப்படி ஒரு சம்பவம்… இப்படி ஒரு தருணத்தில்… இப்படி நடைபெற்றது… என படைப்பாளர் விவரித்திருப்பது… திரைப்படம் என்பதை விட ஆங்காங்கே ஆவண படைப்பின் தாக்கமும் தெரிகிறது. ஆனாலும் இதன் மூலம் போர் சூழலில் வாழும் எளிய மக்களின் நாளாந்த வாழ்வியல் சார்ந்த பாதிப்பை.. சர்வதேச அளவில் கவனப்படுத்தி அது தொடர்பான உரையாடலை … குறிப்பாக போர் தேவையா? என்ற  நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்கான விவாதத்தை இந்த படைப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

திரைக்கதை ஒரே அறை மற்றும் வீட்டிற்குள் நடைபெறுவதால் உரையாடல்கள்… கதாபாத்திரத்தின் உணர்வுகள்… ஆகியவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர்..  இந்திய அமைதிப்படையைச் சார்ந்த இராணுவ வீரர்கள் அந்த திருமண வீடு சார்ந்த பகுதிக்கு வருகை தருவதற்கான காரணத்தை அழுத்தமானதாக குறிப்பிடாதது பலவீனம்.

அத்துடன் திரைக்கதையில் ‘அபோகலிப்ஸ் நவ் ‘- ‘ஆல் தட்ஸ் லெப்ஃட் ஆஃப் யூ’ ஆகிய ஹொலிவுட் திரைப்படங்களின் சாயலும், தாக்கமும் தெரிகிறது. யதார்த்தம் என்றாலும்.. தமிழ் அல்லாத வேற்று மொழி உரையாடல் .. பார்வையாளர்களை நெருடுகிறது.

படத்தின் திரைக்கதை நகர்வில் ஒவ்வொரு காட்சியின் நிறைவிலும் வன்முறை வெடித்து விடுமோ..! வன்முறை வெடித்து விடுமோ..!  என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பது.. இயக்குநர் திறம்பட கையாண்டிருக்கும் கொமர்சல் படைப்பிற்கான உத்தி.

இதற்கு ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன் – இசையமைப்பாளர் கே – படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர் – ஆகிய மூவரும் தங்களின் முழுமையான புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள்.

கதவை சாற்றிக் கொண்டு ,மின் விளக்குகளை அணைத்துவிட்டு, இருளில் வீட்டிற்குள் குடும்ப உறுப்பினர்கள் பதற்றத்தில் இருக்கும் போது.. ராணுவத்தினர் கதவை தட்ட… தட்டிக் கொண்டே இருக்க… தாத்தா.. தன் வயது முதிர்ந்த மனைவியை தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்து கதவை திறக்கும் காட்சி…. சர்வதேச தரத்திலானவை.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நெருக்கடியான இரவை…. உடன் இருக்கும் சக ராணுவ வீரர்கள்- பணய கைதிகள்- போராளி குழுக்கள்- ஆகியோரை எதிர்கொள்ளும் இந்திய ராணுவ கப்டன் கதாபாத்திரத்தை இயக்குநர் படைப்பு சுதந்திரத்திற்கான எல்லைகளை தனக்கே உரிய வகையில் சற்று வளைத்து உருவாக்கி உலவ விட்டிருக்கிறார். இதனை அவருடைய புத்திசாலித்தனம் என்றும் குறிப்பிடலாம். படைப்பிற்கான சமரசம் என்றும் குறிப்பிடலாம்.

நடிகர்கள் அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். யாழினி கதாபாத்திர வடிவமைப்பும்… திரை கதையில் அதனை பாவித்த விதமும்… இயக்குநரின் படைப்புத் திறனுக்கு நற்சான்று.

வாசுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சித்து குமரேசனுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன் திறமையை இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். டொக்டர் தேவனாகவும் , போராளியாகவும் தோன்றும் சனந்த்தும்  நன்றாக நடித்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலும் தமிழக மக்களை கடந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் – கேப்டன் விஜயகாந்த் ஆகியோரை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்ற விவரணம்… இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.‌

ஈழத்தில் நடைபெற்ற போர் குறித்த இன்னும் வீரியமான படைப்புகள் வெளியாவதற்கு இந்த ‘நீளிரா ‘மிகப் பெரிய திறவுகோல்.

நீளிரா – நினைவு சின்னம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.