புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றுதான் ‘Deport now, appeal later’ திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் படி, இங்கிலாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.
அவர்கள் மேல்முறையீடு செய்யவேண்டுமாக இருந்தாலும், தாங்கள் நாடு கடத்தப்பட்ட நாட்டிலிருந்துதான் மேல்முறையீடு செய்யமுடியும். அதுதான், ‘Deport now, appeal later’. அதாவது, “இப்போது நாடு கடத்துங்கள், பின்னர் மேல்முறையீடு செய்யுங்கள்” என அது அர்த்தப்படுகிறது.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரஸா மே, உள்துறைச் செயலராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது.
முன்னதாக, தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பின்லாந்து, நைஜீரியா, எஸ்தோனியா, அல்பேனியா, பெலிஸ், மொரிஷியஸ், தான்சானியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளுக்களை சேர்ந்தவர்களே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நாடுகளின் பட்டியல் 23ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, அங்கோலா, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, கயானா, கென்யா, லாத்வியா, லெபனான், உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆயின் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.
இதேவேளை, இங்கிலாந்தில் சிறைக் கைதிகளுக்காக ஆண்டுக்கு சராசரியாக 54,000 பவுண்டுகள் செலவிடப்படுகின்றமையால், இத்திட்டத்தால் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என்றும் நாட்டின் பாதுகாப்பும் மேம்படும் என்றும் இங்கிலாந்து அரச அதிகாரிகள் இதனை வரவேற்றுள்ளனர்.