அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதன்படி, ரணில் விக்கிரமசிங்க தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்புடைய செய்தி : ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, நடந்தது என்ன?
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் 5 சிறப்பு மருத்துவர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா? இல்லையா? என இந்தக் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள், நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட மருத்துவ அறிக்கை குறித்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்ஷன் பெல்லன தனது கருத்தைத் தெரிவித்தார்.
“மாலை 5 மணி நிலவரப்படி, ஐந்து பேர் கொண்ட நிபுணர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“அடுத்த 24 மணி நேரம் அவர் ஐசியுவில் இருக்க வேண்டும் என்ற கருத்து எங்களுக்கு வந்துள்ளது. அதன்படி, ஏற்பாடுகள் செய்யப்படும். அவருக்கு ஒரு மாற்றம் ஏற்பட்டதாகவும், சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் நாங்கள் கூறுகிறோம். விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை சிக்கலான சிக்கல்களாக மாறும். அதனால்தான் நான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்” என்றார்.
தொடர்புடைய செய்தி : ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல்; கொழும்பில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள் கூட்டாக தெரிவிப்பு!
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் பிரதீப் விஜேசிங்கவிடம் வினவியபோது, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவாரா இல்லையா என்பதுசிறப்பு மருத்துவர்கள் வழங்கிய மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.