இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில்கொண்டு, பால், ரொட்டி மற்றும் முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தாமாக முன்வந்து கட்டுப்படுத்துமாறு சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சில்லறை விற்பனைத் துறையினருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை இங்கிலாந்து திறைசேரி செயலாளர் டான் டாம்லின்சன் (Dan Tomlinson) உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட சில பொருட்களின் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, பேக்கேஜிங் கொள்கைகளில் தளர்வு மற்றும் ஆரோக்கியமான உணவு தொடர்பான புதிய விதிகளை அமல்படுத்துவதில் காலதாமதம் போன்ற சலுகைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. இருப்பினும், இந்த விலைக் கட்டுப்பாட்டை அரசு கட்டாயமாக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால், அரசின் இந்தத் திட்டத்திற்கு சூப்பர்மார்க்கெட் தலைவர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த யோசனையை “முட்டாள்தனமானது” மற்றும் “ஆபத்தானது” என்று மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் (Marks and Spencer) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லார்ட் ரோஸ் (Lord Rose) சாடினார். இது ஒரு தடையற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய விலைக் கட்டுப்பாடுகள் 1970களின் முறையை நினைவூட்டுவதாகவும், இது சில்லறை விற்பனையாளர்களை நஷ்டத்தில் பொருட்களை விற்க நிர்ப்பந்திக்கும் என்று பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியம் (BRC) எச்சரித்துள்ளது.
ஏப்ரல் மாத புள்ளிவிவரப்படி, உணவுப் பொருட்களின் பணவீக்கம் 3%ஆக உள்ளது, இது நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமான 2.8%ஐ விட அதிகமாகும்.
ஈரான் போர் காரணமாக உரங்கள் மற்றும் கால்நடை தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதும், முக்கியமான கடல்வழிப் பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும், தேசிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு போன்ற அரசின் கொள்கைகளும் செலவுகளை அதிகரித்துள்ளதாகச் சில்லறை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.