மாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் “புகழேந்தி இன்னும் வரேல்லையா?” என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய் நாற்காலியில் அமர்ந்தார்.
அந்தக் குடும்பம் கிளிநொச்சியிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கின்றது. அப்பாவுக்கு நான்கு ஏக்கர் வயல் உள்ளது. நல்ல கடின உழைப்புள்ள ஒரு விவசாயி. தன்நிறைவோடு நடுத்தர வாழ்க்கை வாழும் குடும்பம் அது. புகழேந்திக்கு ஒரு அக்காவும் தம்பியும் உள்ளனர். புகழேந்தி பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் காலம் அது.
முற்றத்து மாமரத்தில் அணில் கொந்திய மாம்பழம் ஒன்று விழுந்திருந்தது. மிகவும் இனிப்பாக இருக்கும். விலாட்டு மாம்பழம் அது. அணில் கொந்திய பக்கத்தை வெட்டி எறிந்து விட்டு அப்பாவுக்கு அதில் ஒரு துண்டு கொண்டு வந்து அம்மா கொடுத்தார்.
“எனக்கு வேண்டாம் அவனுக்கே கொடு” என்றார் அப்பா.
அந்த மரத்து மாம்பழம் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம் என்பது அவருக்கு தெரியும். அந்த நேரம் என்று பார்த்து, புகழேந்தியும் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி விட்டு உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அப்பாவும் அவனைக் கண்டதும் காட்டு கத்தல் கத்த தொடங்கினார்.
“பிரச்சினையான நேரத்தில் வீட்டில் இருந்து படிக்க வேண்டிய வேளையில் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வருகிறியே” என்று தொண்டை கிழிய கத்தினார்.
எருமை மாட்டில் மழை பெய்தது போல எதுவும் கேட்காமல் அடுக்களையை நோக்கிச் சென்றான்.
“எங்கே அம்மா அவரைத் தேடிப் பிடித்து கல்யாணம் செய்தீர்கள்?” என்று கேட்டுச் சிரித்தான்.
இரவுச் சாப்பாடு என்ன என்று அவனும் வினவ “புட்டும் முட்டை பொரியலும் மாம்பழமும் இருக்கிறது” என்றார் அம்மா. குளித்துவிட்டு வந்தவுடன் தம்பியுடன் நன்றாக வம்பளந்து கொண்டே சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றான்.
விடியற்காலையில் புகழேந்தி நித்திரையில் இருக்கும்போது, அவனது நண்பன் சாந்தன் ஓடிவந்து எழுப்பினான். இராணுவம் கிளிநொச்சியை நோக்கி வருகிறது. எல்லோரும் வேறு இடம் போக வேண்டுமென்றான்.
வீதியில் சில ஆட்கள் இடம்பெயர்ந்து போய்க்கொண்டு இருந்தனர். இவர்களும் தங்களுடைய முக்கியமான பெறுமதியான பொருட்களை கட்டினார்கள். புகழேந்தியின் ஓவியங்களையும் அப்பா எடுத்து வைக்கச் சொன்னார். அவன் ஒவ்வொரு ஓவியத்தோடு பாசம் வைத்துப் பேசுவான்.
கிளிநொச்சியிலிருந்து விசுவமடு என்னும் இடத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் நிலத்தில் தற்காலிகமாக குடிசை அமைத்து தங்கினர். நாளாக ஆக கொண்டு வந்த காசு எல்லாம் கரைந்து போனது. கடைசியாக அம்மாவின் நகையை விற்று அரிசி வாங்கி சமைத்துச் சாப்பிட்டனர். அங்கும் நிறையப் பேர் எறிகணைத் தாக்குதலால் இறந்துபோனார்கள். மேலும் இராணுவம் அவர்கள் இருந்த இடம் நோக்கி முன்னேறியது. அடுத்து புகழேந்தியின் குடும்பமும் முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றது.
புகழேந்திக்கு இரண்டு நாளாக நல்ல காய்ச்சல் காய்ந்தது. ஒழுங்கான சாப்பாடும் இல்லை. அம்மா பசிக்குது என்று ஈனக் குரலில் முனகினான்.
அப்பா வெளியில் போய் வருவதாக கூறிச் சென்றார். எதையாவது விற்று அரிசி வாங்க அவர்களிடம் எதுவும் இல்லை. விற்பதற்கு யாரிடமும் அரிசியும் இல்லை. அந்த இடத்தில் புகழேந்தியின் நண்பன் சாந்தன், அப்பாவைக் கண்டு யாரோ கஞ்சி கொடுக்கிறார்கள் என்று கூட்டிச்சென்றான்.
அங்கு மிக நீளமான வரிசையில் மக்கள் நின்றனர். பொறுமையோடு நின்று அவர்களது முறை வரும்போது கஞ்சியை வாங்கிக்கொண்டு புறப்பட்டனர். எங்கிருந்தோ வந்த எறிகணை அப்பாவை படுகாயப்படுத்தியது. சாந்தன் துடிதுடித்துப் போய் கத்திக் குளறினான். வைத்தியசாலைக்கு கொண்டு போகிறேன் என்று அழுதான்.
“இல்லை மகனே என்னால் முடியாது இந்த கஞ்சியைக் கொண்டுபோய் புகழேந்தியிடம் கொடு” என்று சொன்னபடியே அவரது உயிர் பிரிந்து போனது.
.
நிறைவு..
.
.
.
ஜெயஸ்ரீ சதானந்தன்