என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்
என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மா
என் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்கு
தேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்
துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்
அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வு
பிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறது
கண்ணீரில் கரைகிறேன்
நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறது
தூரத்துக் கடலிருந்து சூரியன் எழுந்து வருகிறான்
வானம் நீலப்பளிங்காய் மிளிர்கிறது
கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கும் கரையில் இலைகளற்ற மரம்
கரையொதுங்கி இருக்கிறது படகு
கருமேகங்கள் திரள்கின்றன
அலையற்ற நீரில் மலைப்பசுமை புகைப்படமாய் படிகிறது
பூமரக்கிளையில் இரு வெண் புறாக்கள்
ஒன்று தலையை கோதிட
மற்றொன்று கவிழ்ந்து அதன் தாடையை நீவுகிறது
பூக்கள் புறாக்களின் மீது சொரிகின்றன.
வசந்ததீபன்