வவுனியா, செட்டிகுளம், பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் உள்ள வாழவைத்தகுளம் கிராமத்தில் உள்ள காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து அப்பகுதி முஸ்லிம் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (7.12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா, ஆண்டியாபுளியங்குளம், பகுதியில் உள்ள வாழவைத்தகுளம் கிராமத்தில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என்பவற்றினை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் கட்டுமான வேலைகளை செய்யவிடாது இராணுவம் தடுத்துள்ளதுடன், இராணுவ வேலிகளையும் அமைக்க முற்பட்டனர். இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என பதாகை ஒன்றினையும் அப் பகுதியில் நிறுவுவதற்கு இராணுவம் முயன்றுள்ளனர்.
இக் காணிகளை துப்பரவு செய்து முதற்கட்டமாக விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு கிராம மக்களால் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே இராணுவத்தால் தடை விதிக்கப்பட்டதாகவும் இக் காணிகளுடன் சேர்த்து தற்போது விவசாயம் செய்து வரும் 160 ஏக்கர் வயல் நிலத்தையும் இராணுவ தேவைக்காக சுவீகரிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அக்கிராமமக்கள் தெரிவிக்கையில் எங்களுடைய காணியை இராணுவம் அபகரித்து அதில் தோட்டம் செய்து அந்த மரக்கறிகளை எங்களுக்கு விற்று காசு வாங்குகிறது. ஆனால் காணி உள்ள நாங்கள் கூலிவேலைக்கு போகிறோம், எங்கள் பிள்ளைகளும் கூலி வேலைக்கு போகிறார்கள் எங்கள் காணி எங்களுக்கு வேண்டும் எனத்தெரிவித்ததுடன் அரசியல்வாதிகள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளும் சமரசம் செய்ய முயற்சித்த போதிலும் அதுவும் பயனற்று ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்தது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, காணி கிடைக்கும்வரை நகரமாட்டோம், காணி அதிகாரம் இராணுவத்திற்கா? பிரதேச செயலகத்திற்காக?, அரசாங்கம் தரும் காணிகளை இராணுவமே பறிக்காதே, வட பகுதிக்கு காணி அதிகாரத்தை தா, இராணுவ அராஜகம் ஒழிக, அரசே ஒரு கையால் தருவதே மறு கையால் பறிகாதே, அரச உறுப்பினரின் கிராமத்திற்கே இந்த நிலையா? என கோசங்களை எழுப்பினர்.