கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொடர்ந்தும் கொடூரமான குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, பொதுஜன பெரமுன தரப்பினர் குடும்ப உறுப்பினரான கோத்தபாய ராஜபக்சவை இம்முறை களமிறக்குகின்றனர்.இந்த வேளையில் இது சிங்கள மக்களுக்கான தேர்தல், சிங்கள தலைவர்களுக்கான தேர்தல் எனவே இந்த தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டுமென சிலர் கூறுகின்றனர்.சிலர் யாருக்கென்றாலும் பறவாயில்லை, வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறன கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

எமது குடும்பத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச குடும்பம் எவ்வாறு 2005ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியது என்று நாம் பார்க்கவேண்டும்.அந்தத்தேர்தலில் எங்களுடைய வாக்களிப்பு தவிர்ப்பினால்தான் ராஜபக்ச குடும்பம் ஆட்சிபீடம் ஏறியது.அவர்கள் ஆட்சிபீடம் ஏறி, எமது இனத்தைக் கொன்றொழித்தார்கள், பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஒரு கொடூரமான ஆடசி ஆவர்களுடைய ஆட்சிக்காலத்தில்இடம்பெற்றது.

ராஜபகசகடும்பம் தமிழ் மக்கள் வேண்டமென ஒதுக்கினார்கள்.அவ்வாறு எந்தமக்களை வேண்டாமென ஒதுக்கினார்களோ, அந்த தமிழ் மக்களாலேயே அவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார்கள்.அவ்வாறு அவர் தோற்கடிக்கப்பட்டபிற்பாடு, நான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டேன் என மகிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தினார்.எங்குடைய ஒரே ஆயுதம் வாக்குரிமையாகும். அதை பகிஸ்கரிக்கவேண்டும், அல்லது அந்த ஆயுதத்தை பாவிக்கக்கூடாதெனக் கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ரணில் விக்கிரசிங்க எமக்கு சமஸ்டி தருவதாக கூறினார். எனினும் நாம் அந்தத் தேர்தலை நாம் வாக்களிக்காது பகிஸ்கரித்தோம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எம்மிடம் ஆயுதபலமிருந்தது. தற்போது அந்த ஆயுதபலமும் எம்மிடமில்லை.வாக்குரிமை என்பது எம்மைப் பாதுகாப்பதற்கான ஆயுதமாகும். அந்த ஆயுதத்தையும் கீழே வைக்கும் படியாக, சிலர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே 35வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார். தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக, ஜனாதிபதி தேர்வுசெய்யப்படமாட்டார் என்றில்லை. எனவே தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டும்.

கோத்தாபய ராஜபக்ச என்பவர், ராஜபக்ச குடும்பத்திலேயே மிகவும் மோசமான ஒருவராவர். கடந்த கால யுத்தமும் அவருடையதுதான். கடந்த காலங்களில் “இது கோத்தாபாயவின் யுத்தம்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.

எனவே தமிழ் மக்களாகிய நாம், வாக்களிக்காமல் பகிஸ்கரிப்புச்செய்து அத்தகைய கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா.?

இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையில்இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது மக்களுக்கு சார்பான பல வாக்குறுதிகளை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்.

அரசியல்தீர்வு தொடர்பாக, ஒருமித்த பிளவுபடாத நாட்டிற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி முன்வைத்துள்ளார்.இவ்வாறாக வாக்குறுதி வழங்குவதற்காவது அவருக்கு துணிவிருக்கின்றது.அவ்வாறான தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வாக்குறுதிகள் எதுவும் கோத்தபாயவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை . அதற்கான துணிவும் அவரிடம் இல்லை.

நாம் கடந்த ஜனவரியில் அரசியலமைப்புத் தொடர்பில், ஒரு திட்ட வரைபை பாராளுமனறில் முன்வைத்துள்ளோம். அதை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அந்த விடையத்தை நாம் முழுமையாக்கக்கூடிய சூழ் நிலையும் இருக்கின்றது.சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக அதிகமாக தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கவேண்டுமென கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.