Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

7 minutes read

தமிழ் மக்களின் விடிவிற்காக உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை இன்று உலகத்தமிழினம் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தது.

தமிழர் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள் இலங்கை நேரம் மாலை 6.05 மணிக்கு கூட்டாக மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, மாவீரர்கீதம் ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட, அஞ்சலிக்காக கூடியிருந்த மக்கள் நினைவுச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும், எல்லா தடைகளையும் கடந்து, தாயகத்தின் அனைத்து துயிலுமில்லங்களிலும், அவற்றின் அருகிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள எல்லங்குளம், கோப்பாய், கொடிகாமம் துயிலுமில்லங்களின் அருகில் காலையில் அஞ்சலி நிகழ்வுகள் நடந்தன.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் துயிலுமில்லத்தின் அருகிலும், வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவிலும் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

 கிளிநொச்சியில் கனகபுரம் துயிலுமில்லம், முல்லைத்தீவில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம், வவுனியாவில் நகரசபை மண்டபம், ஈச்சங்குளம் துயிலுமில்லம், வன்னி விளாங்குளம், மட்டக்களப்பில் மாவடி முன்மாரி துயிலுமில்லம், திருகோணமலை சம்பூர் துயிலமில்லம் உள்ளிட்ட பல இடங்களில் நினைவஞ்சலிகள் நடந்தன.

கோப்பாய் துயிலுமில்லம்- யாழ்ப்பாணம்

விசுவமடு துயிலுமில்லம்

எள்ளங்குளம் துயிலுமில்லம்- வடமராட்சி

மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.

வாகரை கண்டலடி துயிலுமில்லம்- மட்டக்களப்பு

வன்னி விளாங்குளம் துயிலுமில்லம்

ஈச்சங்குளம் துயிலுமில்லம்- வவுனியா

3 மாவீரர்களின் தந்தை எஸ்.யேசுதாஸ் பொதுச்சுடரை ஏற்றினார்

தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்

 யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

சரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று காலை தடைகளை மீறி – பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது.

அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

ஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு

வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று(புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.

ஈச்சங்குளம் மாவீரர் மயானம் இராணுவ முகாமாக காணப்படுவதால் அதற்கு அருகாமையால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் தினம் 

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மண்ணுக்காக போரடி தமதுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் கார்த்திகை 27 (இன்று) தமிழர் தாயகப்பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்கள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் மாவீரர் தினத்தை மெழுகுதிரிச் சுடரேற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.

இன்று மாலை 6.05 மணியளவில் சுடர்கள் ஏற்றப்பட்டு மாணவர்கள் தமது நினைவஞ்சலியைச் செலுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More