இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கமைய இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி இலங்கையில் 1020 கொரோனா தொற்றாளர்கள் என பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படையினரில் 209 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஏனையோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 28 பேரும் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாஎல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுள் ஏற்கனவே 10 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை வைத்தியசாலை மற்றும் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரின் மருத்துவ மாதிரிகள் பெறப்பட்டு இன்று (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து 28 கடற்படையினர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதுடன் அவர்கள் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர் .
கொரோனா பரவல் இலங்கையில் ஆரம்பத்தில் மிக மிக குறைவாகவே காணப்பட்டு வந்தது. திடீரென இவ்வாறு ஆயிரத்தை தாண்டுவதற்கு காரணம் தனிமைப்படுத்தல் முகாமில் நோயாளர்களைப் பராமரித்து வந்த படையினராலேயே என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.