அவுஸ்ரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் இன்று (புதன்கிழமை) 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது என்றும் தலைமை சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் இருந்து விக்டோரியா மாநிலத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் இன்று இதுவரை அவுஸ்ரேலியாவில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விக்டோரியாவில் மாத்திரம் 20 ற்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது இரண்டாவது அலை குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ள அதேவேளை மாநிலத்தில் இதுவரை 241 பேருக்கு சமுக தொற்று மூலம் கொரோனா வைரஸ் பரவியமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் வீட்டிலேயே இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.