தைவானுக்கு அருகில் அமைந்துள்ள தனது தொலைதூர மேற்குத் தீவான Yonaguniயில் 2031 மார்ச் மாதத்திற்குள் மேற்பரப்பு-வான்வழி ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் Shinjiro Koizumi அறிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தெளிவான காலக்கெடு தற்போது முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
தைவானை தனது பகுதியாகக் கருதும் சீனாவுடன் நீடித்து வரும் பதற்றநிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யோனகுனி தீவு தைவானிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது; தெளிவான வானிலையில் தைவான் கரையை அங்கிருந்து காண முடியும்.
கடந்த நவம்பரில் ஜப்பான் பிரதமர், தைவான்மீது தாக்குதல் நடந்தால் ஜப்பானின் சுயபாதுகாப்புப் படைகள் செயல்படலாம் என குறிப்பிட்டதையடுத்து, டோக்கியோ–பீஜிங் உறவு மேலும் பதற்றமடைந்தது.
அதன்பின் சீனா போர் கப்பல்கள் அனுப்புதல், அரிய உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சுற்றுலா மற்றும் கலாசார நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
கோய்ஸுமி அறிவிப்பின்படி, யோனகுனியில் நிறுவப்படவுள்ள ஏவுகணை அமைப்பு சுமார் 50 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளைத் துல்லியமாக தாக்கக்கூடியது.
360-டிகிரி கண்காணிப்பு திறன் கொண்ட இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணித்து, 12 இலக்குகளை எதிர்கொள்ளும் திறன் உடையதாக கூறப்படுகிறது.