செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்

1 minutes read

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை (27) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமானதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத கால அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு கோரப்பட்ட 19 மில்லியன் ரூபா நிதி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அப்பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகளை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், 2025ஆம் ஆண்டு முடிவடைந்ததனால் அந்த நிதியை இந்த ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

அதற்கமைய மேலும் ஐம்பத்தாறு நாட்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவ்வாறு அகழ்வுப் பணிகளுக்காக மாத்திரம் புதிதாகக் கோரப்பட்டுள்ள நிதி சுமார் 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.

45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.

மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் அனுமதி கிடைத்துள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கு மேலதிகமாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா தூதரக அதிகாரிகளும் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட அனுமதி கோரியிருந்தன.

28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.

உள்ளூர் செய்திகள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.