மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 43 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில், பெற்ற தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.
ஆண்டிகுவா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களையும் பெத்தும் நிசங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பிராவோ 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் மற்றும் ஒபேட் மெக்கோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி 43 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒபேட் மெக்கோய் 23 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமோன்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் அகில தனஞ்சய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.