தமிழ் தேசிய அரசியலை மட்டுமல்ல, தமிழர் என்ற தனித்துவ இன அடையாளத்தையும் எதிர்காலத்தில் நாங்கள் இழந்து விடுவோமோ என்ற ஆதங்கத்தை, JVP இல் பெருமளவில் இணையத் தொடங்கியிருக்கும் எம்மவர்களின் செயற்பாடு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
2009 இல் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் “தமிழ் தேசியம்” என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் தோல்வியும், அதை முன்னெடுத்த அரசியல்வாதிகளின் கேவலமான நடத்தைகளும், எங்கள் அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் எம்மவர்கள் நம்பிக்கை இழந்திருப்பதின் வெளிப்பாடே எம்மவர்களிற்கு் ஏற்பட்டிருக்கும் JVP மீதான மோகம்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான வெஸ்ட்மினிஸ்டர் முறையில், சிறுபான்மையினர் ஒரு குழுமமாக தனித்து் இயங்குவதே சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் என்பது அரசியல் விஞ்ஞானம் அறிந்தவர்களிற்கு நன்றாகவே விளங்கும். சிறுபான்மையினர் ஒரு இனக்குழுமமாக அரசோடு இணைந்து பயணிக்கும் போது தான் தனது இனம்சார் நன்மைகளை பெறமுடியும். அதைவிடுத்து, ஆட்சியில் இருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள் மட்டும் தலைமைப் பொறுப்புக்களில் இருக்கும் கட்சிகளில் சிறுபான்மையினர் இணைவது, சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான அரசியல் அல்ல என்பதை அரசியல் விஞ்ஞானம் மட்டுமன்றி உலக வரலாறும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
கடந்த காலங்களில் மலையகத் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் அரசில் ஒட்டி இணைந்து பயணித்தை விட ஒரு படி மேலான, அரசில் பங்காளியாக இணைய கிடைத்த மாட்சிமை மிக்க சந்தர்ப்பத்தை, சரியான அரசியல் காரணங்கள் எதுவுமின்றி, தமிழர் தரப்பு தவறவிட்டதன் பலனை, JVP இன்று நன்றாகவே அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
2024 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கடும் சிங்கள தேசியவாத கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட JVP கட்சியின் வேட்பாளரான அநுர, யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியத்தின் தாய்வீடான தமிழரசுக் கட்சியின் வாசல் தேடி வந்து, ஐனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை தமிழரசுக் கட்சி உதாசீனம் செய்தது. 1982 இலிருந்து, 1989 ஐயும் 2005 ஐயும் தவிர, ஜனாதிபதி தேர்தல்களில் தனித்தே போட்டியிட்ட JVP, வேறொரு கட்சியை நாடித் தேடி வந்து ஆதரவு கேட்ட முதலாவது முறையும் இதுவாகத் தானிருக்க வேண்டும்.
தெற்கில் மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள், இரு பாரம்பரிய கட்சிகளையும் புறமொதுக்கி விட்டு JVP இற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க தென்னிலங்கை தயாராகி விட்டது என்பதை அறிந்திருந்தும், தமிழர்கள் JVP இற்கு வாக்களிக்க இன்னும் தயாரில்லை என்ற காரணத்தாலோ என்னவோ ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவளிக்க தமிழரசு முடிவு செய்தது.
மகிந்தவின் ஆட்சியிலும் ரணிலின் ஆட்சியிலும்
பங்கெடுத்த எந்த கட்சியினரோடும் தாம் ஆட்சியில் பங்காளிகளாக்க மாட்டோம் என்ற அறிவித்த JVP, தமிழரசை மட்டும் அமைச்சரவையில் இணையுமாறு அழைத்ததாக தமிழரசே உறுதிப்படுத்தியது. ஒரு வேளை, ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு அநுரவை ஆதரித்திருந்தால், அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் JVP நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் போயும் போயிருக்கலாம்.
ரணிலிடம் அரசியல் லஞ்சமாக Bar permit பெற்றவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை JVP நிறைவேற்றாமல் போனதற்கும், தமிழரசு தங்களை ஆதரிக்காமல் போனதின் காரணகர்த்தாவான முக்கியஸ்தரை பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற JVP இன் நோக்கமே காரணமாக இருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழசு JVP உடன் இணைந்து அரசமைக்க தவறவிட்ட சந்தர்ப்பம், தமிழரசின் ஆதரவளாளர்கள் சிலரை, ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே JVP பக்கத் தள்ள வைத்து, அவர்களில் ஒருவரை JVP இன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியது.
இன்றைய தமிழ் இளைஞர்கள் தங்களை குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட விரும்பாதவர்கள். புதிய யதார்த்தங்களாலும் புதிய முன்னுரிமைகளாலும் வடிவமைக்கப்பட்ட உலகப் பிரஜைகளாக அவர்கள் வலம் வர விரும்புகிறார்கள்.
இன்றைய தலைமுறை குறுகிய இன அடையாளங்களிற்குள் தங்களை சுருக்கிக் கொள்ளாமல் பொருளாதார வாய்ப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எங்கள் ஊர், எங்கள் கிராமம், எங்கள் தாயகம் என்ற
நிலப்பரப்பு எல்லைகளால் கட்டுப்படாமல், digital உலகின் மூலம் அவர்களின் எல்லைகள் அகிலத்தின் எல்லைகளிற்கு வியாபித்து நிற்கிறது.
எங்கள் பிள்ளைகள் தங்களை இனரீதியான தேசியவாத சிந்தனைக்களால் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்காது, பரந்து பட்ட இணக்கத்தையும் உள்ளடக்கத்தையும் தேர்ந்தெடுப்பதும், JVP இன்று பேசும் புதிய மொழி அவர்களை வசியப்படுத்துகிறது.
எமது பிள்ளைகள் தங்கள் பாரம்பரியத்தை நிராகரிப்பவர்கள் அல்ல; அதற்கு மாறாக, அதனை மதிக்கிறார்கள். ஆனால் அந்த பாரம்பரியமே தங்களை முழுமையாக வரையறுக்க வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. இதன் மூலம் நாம் ஒரு கடினமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது; இன்றைய வடிவிலுள்ள தமிழ் தேசியம், இன்றைய எங்கள் தமிழ் தேசியவாதிகள் பேசும் தமிழ் தேசியம், எங்கள் பிள்ளைகளிற்கு விளங்கும் மொழியில் பேசப்படுவதில்லை.
ஒருகாலத்தில் ஆதிக்க சக்தியாக பேசப்பட்ட சிங்கள தேசியவாதம், “அனுர அலையின்” பின்னணியில், பல வகைகளில் தனது கடுந் தொனியை மென்மையாக்கியிருக்கிறது. இதனால் தமிழ் தேசியவாதம் தனது எதிர்சக்தியை (counter weight) இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிங்கள தேசியவாதத்தை எதிர்த்து எதிர்த்து எதிர்ப்பின் வழியே வளர்ந்து வந்த தமிழ் தேசியவாதம் இன்றைய அமைதி பொழுதுகளில் தத்தளித்து தடுமாறுகிறது.
எதிர்ப்பின் அடிப்படையில் உருவான தமிழ் தேசிய இயக்கம், இப்போது சமரச வழிகளில் தன்னைத் தானே மீள்கட்டமைக்கும் வலிமையை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணிக்கிறது. தமிழ் தேசியம் மாற்றத்திற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், தோல்வியால் அல்ல; அலட்சியத்தால், முக்கியத்துவம் இழந்து மங்கிப் போகும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
சிறு வயதில் நாங்கள் படித்த The Pied Piper of Hamelin என்ற ஜெர்மனிய கதை பலருக்கு நினைவில் இருக்கும். Hamelin என்ற நகரில் எலிகள் பெருகிய போது, ஒரு இசைக் கலைஞன் தனது மந்திரக் குழலால் அவற்றை நகரத்திலிருந்து வெளியே கொண்டு செல்கிறான். ஆனால் அந்நகர மக்கள் அந்த இசைக் கலைஞனிற்கு வாக்குறுதி அளித்த பணத்தை வழங்கவில்லை. அதற்குப் பழிவாங்க, அந்த இசைக் கலைஞன் நகரத்தின் குழந்தைகளை தன்னோடு அழைத்துச் சென்று மறைந்து விடுகிறான்.
JVP பாசறையில் அணி அணியாக இணைந்து கொண்டிருக்கும் எம்மவர்களை பார்க்கும் போது, எங்களிற்கும், எங்கள் கண்கள் முன்னால், இந்த The Pied Piper of Hamelin கதை தான் அரங்கேறுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. Hamelin கிராமத்தில் காணாமல்போன பிள்ளைகளின் கதிபோல, எங்கள் பிள்ளைகளிடம் இருந்தும் தமிழ் அடையாளம் காணாமல் போவதில் இருந்து தடுத்து, JVP எனும் Pied Piper இடமிருந்து காப்பாற்ற, நாங்கள் என்ன செய்ய போகிறோம்?
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்
