செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு எரிபொருளுக்கு நீளும் வரிசை… செயற்கைத் தட்டுப்பாடு இலங்கைத் தீவையே முடக்கும் அபாயம்… | தீபச்செல்வன்

எரிபொருளுக்கு நீளும் வரிசை… செயற்கைத் தட்டுப்பாடு இலங்கைத் தீவையே முடக்கும் அபாயம்… | தீபச்செல்வன்

3 minutes read

மட்டக்களப்பில் இருந்து தன்னுடைய மனைவியின் மருத்துவத் தேவைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த உறவு ஒருவர், எரிபொருள் பெற முடியாமையினால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச் சம்பவத்தை அறிந்த பிறகு, வீதிகளில் தரித்துக் கிடக்கும் வாகனங்களைப் பார்க்கும்போதெல்லாம் மிகப் பெரிய கவலை ஏற்பட்டது. போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அரசு சொன்ன பிறகும் இரவிரவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்கியிருந்து கொள்கலன்களை நிறைத்துச் செல்பவர்களை காண நேரிடுவது என்ன மாதிரியான மன்நிலையில் வாழ்கிறோம் என்ற கேள்வியைத் துளைக்கிறது.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் யாரோ ஒருவரின் அவசர பயணம் ஒன்று, உயிர்காக்கும் பயணம் ஒன்று செயற்கைத்தட்டுப்பாட்டால் தடைப்படுவது என்பது பெரிய துயரமல்லவா?

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் யாரோ ஒருவரின் அவசர பயணம் ஒன்று, உயிர்காக்கும் பயணம் ஒன்று செயற்கைத்தட்டுப்பாட்டால் தடைப்படுவது என்பது பெரிய துயரமல்லவா? எரிபொருளை தங்கள் வீடுகளில் முடக்குவதால் மேற்சொன்ன சிக்கல் மாத்திரமல்ல இன்னும் பல சிக்கல்கள் ஏற்பட்டு அது முழுத் தீவையுமே முடக்கும் ஒரு நிலைக்கும் தள்ளலாம்.

மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு அரசியலில் உருவாகும் ஒவ்வொரு போரும் உலக பொருளாதாரத்தில் அலைவீச்சை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களின் பின்னணியில், எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையை முன்வைத்து, இலங்கையில் மீண்டும் ஒரு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று கொள்ள வேண்டிய அவசியம் ஏதுமில்லை. மாறாக, செயற்கையாக கட்டமைக்கப்படும் ஒரு முடக்க நிலை காரணமாகவே பெரும் பின்னடைவையாக முடக்க நிலை உருவாகும்.

உலக சந்தையில் எண்ணெய் கையிருப்பு, மாற்று விநியோக நாடுகள், நீண்டகால ஒப்பந்தங்கள் போன்றவை உள்ள சூழலில், இலங்கையில் உடனடியாகவும் தீவிரமாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எந்தவொரு மோதலும் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பாதிக்கக்கூடியது என்பது உண்மை. ஆனால் உலக சந்தையில் எண்ணெய் கையிருப்பு, மாற்று விநியோக நாடுகள், நீண்டகால ஒப்பந்தங்கள் போன்றவை உள்ள சூழலில், இலங்கையில் உடனடியாகவும் தீவிரமாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. கடந்த கால அனுபவங்களை நோக்கினால், சர்வதேச நெருக்கடிகளை உள்நாட்டு நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்கான காரணமாக ஆட்சி வர்க்கம் பயன்படுத்தியதை மக்கள் மறந்துவிடவில்லை. அதுவும் மக்களின் இந்தப் பதற்றங்களுக்கு அடிப்படையாக  இருக்கிறது.

எரிபொருள் நாட்டின் இரத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு என்பது வெறும் வாகன ஓட்டத்தை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. அது நாட்டின் மொத்த பொருளாதார இயந்திரத்தையே நிறுத்திவிடும் சக்தி கொண்டது. இன்னும் சொன்னால் மனித உடலுக்கு இரத்தம் அவசியமானதுபோல ஒரு நாடு இயங்க எரிபொருள் அவசியமானது. போக்குவரத்து முடங்கினால், தொழில் நிறுவனங்கள் இயங்காது. அவை இயங்காவிட்டால், தொழிலாளர்களின் வருமானம் குறையும். வருமானம் குறைந்தால், சந்தைச் சுழற்சி மந்தமடையும். இதன் இறுதிக் கட்டமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களே மிகப் பெரிய சுமையைச் சுமக்க வேண்டிய நிலை உருவாகிறது.

எரிபொருள் கிடைக்காது என்ற செய்தி பரப்பப்படுவதனால் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்குகின்றனர். எரிபொருள் பதுக்கல் அதிகரிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் “நாடளாவிய முடக்கம்” என்பது தானாக உருவாகும் ஒன்றல்ல. அது மிக முக்கியமாக கொள்கை முடிவுகளால்  வருகின்ற விளைவு. அத்துடன் விநியோக நிர்வாகம், தகவல் மறைப்பு, பயம் உருவாக்குதல் போன்றவற்றினால் நிகழ்வது. எரிபொருள் கிடைக்காது என்ற செய்தி பரப்பப்படுவதனால் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்குகின்றனர். எரிபொருள் பதுக்கல் அதிகரிக்கிறது. அதனால்  சந்தையில் செயற்கை பற்றாக்குறை உருவாகும். இதன் மூலம் உண்மையான குறைபாடு இல்லாவிட்டாலும், பெரும் நெருங்கடி நிலையொன்று உருவாக நேரிடும்.

அரசியல் ஆபத்து

இந்த முடக்கம் அரசியல் ரீதியாகவும் ஆபத்தானது. மக்கள் கவனம் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளில் சிக்கும்போது, ஜனநாயக உரிமைகள், ஊழல் விவகாரங்கள், அரசியல் பொறுப்புக் கேள்விகள் பின்னால்  தள்ளப்படுகின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மறைக்கப்பட்டு, நெருக்கடி நிலை முன்னிலைப்படுத்தப்பட்டு நாம் மேலும் பின்னடைவுகளை அறுவடை செய்ய நேரிடும். அத்துடன் தேசிய நெருக்கடி என்ற பெயரில் அடக்குமுறைகள் நியாயப்படுத்தப்படலாம். அத்துடன் சர்வதேச அரசியல் பதற்றம் உள்நாட்டு செயற்பாடுகளை நேரடியாக பாதிக்காத போதும் மக்களின் இச் செயற்பாடு அதனை ஏற்படுத்திவிடலாம்.

காலம் காலமாக இலங்கை அரசு தமிழ் மக்களை அழித்தொழிக்க பாரிய பொருளாதாரத்தை செலவிட்டு வந்தமையின் விளைவு

இலங்கை கடந்த காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த அனுபவங்கள் இலங்கைத் தீவில் வாழும் மக்கள் பலரது தலைவிதியை மாற்றியிருந்தது. அது தவறான அரசியல் முடிவுகளால் கொள்ளைப் பிழைகளால் தவறான அரசியல் தேர்வினால் விளைந்தது. காலம் காலமாக இலங்கை அரசு தமிழ் மக்களை அழித்தொழிக்க பாரிய பொருளாதாரத்தை செலவிட்டு வந்தமையின் விளைவு. அதிலிருந்து இலங்கைத் தீவு மீண்டு வருகிறது. இன்னமும் பழைய நிலையை எட்டமுடியவில்லை. மக்களின் நாளாந்த வாழ்வு பெருளாதார சிக்கலின் மத்தியில்தான் நகர்கிறது. எனவே இத்தகைய நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இயல்பு வாழ்வு பாதிக்கும்

எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம், உணவு, மருந்து என அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து, ஒரு நாடளாவிய முடக்கத்தை உருவாக்கும் போது, அது இயற்கை பேரழிவை விட மோசமான மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாக மாறும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடையும் சூழலில், நாட்டின் அடிப்படைச் சேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக முடங்கும். முதன்மையாக போக்குவரத்துத் துறை பாதிக்கப்படும்போது, தனியார் மற்றும் அரச பேருந்துகள் சேவையை குறைக்கவோ நிறுத்தவோ செய்யும் நிலை உருவாகும். இதன் நேரடி தாக்கமாக, பாடசாலைகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வர இயலாத காரணத்தால் மூடப்படலாம்; கல்வி என்பது மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படும்.

வங்கிகள் முழுமையாக இயங்க முடியாமல், குறைந்த நேர சேவை அல்லது கிளை மூடல்கள் ஏற்படும் போது, அன்றாட பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு வணிகச் செயல்பாடுகள் மந்தமடையும்

கடந்த கால நெருக்கடிகள் காரணமாக இன்னமும் பாடசாலைக் கல்வி இயல்புக்குத் திரும்பவில்லை. அண்மையில்தான் சாதாரண தரப் பரீட்சை முடிந்தது. அத்துடன் வங்கிகள் முழுமையாக இயங்க முடியாமல், குறைந்த நேர சேவை அல்லது கிளை மூடல்கள் ஏற்படும் போது, அன்றாட பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு வணிகச் செயல்பாடுகள் மந்தமடையும். அரச நிறுவனங்களிலும் ஊழியர்கள் வருகை குறைவதால், பொதுமக்கள் பெற வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தாமதமடையும் அல்லது நிறுத்தப்படக்கூடும். இப்படியாக செயற்கையாக உருவாக்கப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாடு முடங்குவதுடன் அதனை உருவாக்கும் மக்களே பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் நேரிடும்.

தீபச்செல்வன்

நன்றி – ஐபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.