பருவமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச உதவிகள் வர ஆரம்பித்திருப்பதோடு நேற்று திங்கட்கிழமை பாரிய மீட்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி இருப்பதோடு 33 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலம் ஆரம்பமான ஜூன் மாதம் தொடக்கம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 1,061 ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மலைப்பிரதேசமான வடக்கில் ஆறுகள் நிரம்பி வீதிகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து முதலாவது உதவி விமானங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வர ஆரம்பித்தன. வருடாந்த பருவமழை இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயிர்களுக்கான நீர்ப்பாசனம் மற்றும் ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்புவதற்கு முக்கியமானதாக இருந்தபோதும் இது பெரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.
இந்த ஆண்டின் வெள்ளங்களால் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி பாகிஸ்தான் மக்கள் தொகையில் ஏழில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மில்லியன் வீடுகள் அழிக்கப்பட்டு அல்லது மோசமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
“ஒரு தசாப்தத்தின் பயங்கர பருவமழை” என்று காலநிலை மாற்ற விவகார அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் விபரித்துள்ளார்.