மாதவிடாய்
தனது விருப்பத்தை மீறி, மாதவிடாய் ரத்தத்தை எடுத்துச் சென்றுவிட்டனர் என 28 வயது மகாராஷ்டிர பெண்ணொருவர், பொலிஸில் முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் பேரில், அப்பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
அகோரி பூஜை
தான் மாதவிடாய் ரத்தத்தை கொடுக்க மறுத்தபோதும், அகோரி பூஜை செய்பவர்களுக்கு 50,000 ரூபாய்க்கு விற்பதற்காக வலுக்கட்டாயமாக அதை எடுத்துச் சென்றதாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேற்படி சம்பவம் புகாரளித்த பெண்ணுடைய கணவரின், சகோதரர் வேலை செய்யும் இடத்தில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணபதி பண்டிகையின் போது, தனது கணவரின் சகோதரர் வீட்டில் அப்பெண் தங்கியிருந்தார். அப்போது, அவரின் ‘மாதவிடாய் ரத்தம்’ தேவைப்படுவதாக கணவரின் சகோதரர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உங்கள் மனைவியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்
அப்போது, குழந்தை இல்லாத பெண்ணின் ‘மாதவிடாய் ரத்தம்’ தான் தேவைப்படுகிறது. இதனை ஒருவரிடம் கொடுத்தால், தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கணவரின் சகோதரர் கூறியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது விருப்பத்தை மீறி மாதவிடாய் ரத்தத்தை அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர் என்று அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குடும்ப துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – பிபிசி