இங்கிலாந்து அரச மற்றும் பொது ஊழியர்கள் 100,000-க்கும் மேற்பட்டோர், ஏப்ரல் 28 அன்று மற்றொரு முழு நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இங்கிலாந்தின் பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) சங்கம் தெரிவித்துள்ளது.
ஊதியம், ஓய்வூதியம், பணிநீக்க விதிமுறைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு காரணமாக இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 28 முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்தில் 133,000 சிவில் மற்றும் பொது ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது. அத்துடன், கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்கள் மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
“அதாவது அரச மற்றும் பொது ஊழியர்கள் இன்று முதல் ஏப்ரல் இறுதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள், கடவுச்சீட்டு அலுவலகத்தில் மே 6 வரை ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்” என்று பிசிஎஸ் தொழிற்சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து கடவுச்சீட்டு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
“எங்கள் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை” என்று பிசிஎஸ் பொதுச் செயலாளர் மார்க் செர்வோட்கா கூறினார். “நாங்கள் எங்கள் நடவடிக்கையை அதிகரிக்கிறோம் என்பதை அமைச்சர்கள் கவனிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து, பல அரசாங்கத் துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த ஊதிய உயர்வுகளைக் கோரி, ரயில்வே தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட மற்ற ஊழியர்களின் ஆதரவுடன் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.