இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி, அமெரிக்காவில் வாஷிங்டன் சியாட்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்பு தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் வீதியை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த பொலிஸ் வாகனம், மாணவி ஜானவி கண்டூலா மீது பயங்கரமாக மோதியது.
இதில் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அந்த காரை பொலிஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்ததாக அவருடன் பயணித்த மற்றொரு பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்ததும் அந்த காரை ஓட்டி வந்த உயர் அதிகாரி, மைக்கோலன் என்ற பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது இறந்தது வழக்கமான பெண்தான். 11,000 டொலர் காசோலையை தயார் செய்து வையுங்கள். அவருக்கு 26 வயது தான் இருக்கும். எனவே, பெரிய மதிப்பு இல்லை என்று சொல்லி விட்டு, பலத்த சத்தத்துடன் சிரித்துள்ளார். பதிலுக்கு மைக்கோலனும் கேலி செய்து சிரித்துள்ளார்.
இந்த உரையாடல் அனைத்தும் குறித்த பொலிஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தபட்டிருந்த கெமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் இறந்த இந்திய வம்சாவளி மாணவியை பற்றி 2 பொலிஸ் அதிகாரிகளும் கேலி, கிண்டல் செய்யும் குறித்த வீடியோவை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் இந்த மோசமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியாட்டிலில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது.