அவுஸ்திரேலியா – இஸ்ரேல் பிரதமர்களுக்கு இடையே கடுமாயான சாடல் கருத்துகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசிக்கு எதிராகக் கண்டனக் கணைகளைத் தொடுத்தார்.
அல்பனீசி, ஒரு பலவீனமான தலைவர் என்றும் அவர் இஸ்ரேலை ஏமாற்றினார் என்றும் நெட்டன்யாஹு சாடினார்.
பாலஸ்தீன வட்டாரத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்கத் தயார் என்று அவுஸ்திரேலியா அறிவித்தமை நெட்டன்யாஹுவைக் கோபப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து, “ஒரு தலைவரின் பலம் அவரது வன்முறைச் செயல்களைச் சார்ந்தது அல்ல” என்று இஸ்ரேலியப் பிரதமரை அவுஸ்திரேலிய பிரதமர் சாடினார்.
அத்துடன், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் கருத்துகளுக்கு “கொல்லப்பட்ட மக்கள், பட்டினி கிடக்கும் பிள்ளைகள் ஆகியோரின் எண்ணிக்கையை வைத்து ஒரு தலைவரின் பலத்தை மதிப்பிட முடியாது” என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்கே பதிலடி வழங்கியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வலதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட இஸ்ரேலியத் தலைவருக்கான விசாவை அவுஸ்திரேலியா இரத்துச் செய்தது.
அதற்கு பதிலடியாக அவுஸ்திரேலிய அரச தந்திரப் பிரதிநிதிகளின் விசாவை இஸ்ரேல் இரத்துச் செய்தது.
இவ்வாறாக தொடரும் விரிசல் மோசமாகுமா அல்லது சரியாகுமா என்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.