மத்திய இலண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற Palestine Action போராட்டத்தின் போது 890 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம், Palestine Action குழுவை ஒரு பயங்கரவாதக் குழுவாக தடை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்டது என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் சுமார் 1,500 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்தப் பேரணியானது “அமைதியான போராட்டத்தின் ஒரு உதாரணம்” என்று அமைப்பாளர்களான டிஃபெண்ட் அவர் ஜூரீஸ் (Defend Our Juries) என்ற பிரசாரக் குழு கூறியுள்ளது.
மொத்தம் 890 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 857 பேர் தடை செய்யப்பட்ட குழுவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டனர். மேலும், 33 பேர் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியது மற்றும் பிற பொது ஒழுங்கு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
Palestine Action குழு கடந்த ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டது. ஜூன் 20 அன்று RAF பிரிஸ் நோர்ட்டனில் (RAF Brize Norton) இரண்டு வோயேஜர் (Voyager) விமானங்களுக்கு சேதம் விளைவித்த ஒரு சம்பவத்துக்கு அந்தக் குழு பொறுப்பேற்ற பின்னர் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்த கைதுகள் குறித்து துணை உதவி ஆணையர் கிளேயர் ஸ்மார்ட் கூறுகையில், “நாங்கள் சந்தித்த வன்முறை, ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், முடிந்தவரை அதிக குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன், பல முகமூடிகளை அணிந்த ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய பல நபர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும், சுமார் 20,000 பேர் கலந்துகொண்ட பாலஸ்தீன கூட்டணிக் குழுவின் (Palestine Coalition) மற்றொரு அமைதியான பேரணிக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்யாமல் அல்லது வன்முறை மற்றும் குழப்பத்தில் ஈடுபடாமல் ஒரு காரணத்திற்கான ஆதரவை நீங்கள் வெளிப்படுத்தலாம், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வாரமும் இலண்டனில் அதைச் செய்கிறார்கள் என்றும் ஸ்மார்ட் கூறினார்.