அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக நாளை செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், இலண்டனில் டிரம்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறக்கூடும் என்பதால் டிரம்ப்பின் சந்திப்பை இலண்டனுக்கு வெளியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இங்கிலாந்திற்கு இரண்டாம் முறையாகப் பயணம் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமரை சந்தித்துத் தொழில்நுட்ப, அணுச்சக்தித் துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களில் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து – அமெரிக்கா இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப ஒப்பந்தம்
இதற்கு முன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த டிரம்ப், தமது முதல் தவணையின்போது 2019ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் மறைந்த ராணி எலிசபெத்தை சந்தித்தார். அந்தப் பயணம் குறித்துப் பலமுறை அவர் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.
இம்முறை அவர் அரச குடும்பத்துடன் தேர் ஊர்வலத்திலும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், மறைந்த எலிசபெத் ராணியின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவார்.