இங்கிலாந்தின் நோர்ஃபோக் (Norfolk), தெட்ஃபோர்ட் (Thetford) பகுதியில், இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்திற்குப் பின்னர், பொலிஸாரால் சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.35 மணியளவில் (GMT), A11 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குப் பின்னர், இரு வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநராக கருதப்படும் நபர், துப்பாக்கி போன்ற ஒன்றை கையில் வைத்துக் கொண்டு சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய சிறப்பு பொலிஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சந்தேகநபர், அருகிலிருந்த குறுகிய தூரத்திலிருந்து பொலிஸாரால் சுடப்பட்டார். அவசர மருத்துவ சேவையினரின் முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, A11 இலண்டன் வீதி (London Road) இரு திசைகளிலும் மூடப்பட்டு, மாற்றுப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நோர்ஃபோக் பொலிஸ் தரப்பில், வழக்கமான நடைமுறையின் கீழ், இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct (IOPC)க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்ஃபோக் பொலிஸ் உதவி தலைமை அதிகாரி டேவிட் பக்க்லி கூறுகையில்,
“இந்த சம்பவம் சமூகத்தில் கவலை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் ஆயுதம் ஏந்திய பொலிஸார் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி சம்பந்தப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கின்றனர். இருப்பினும், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் மிகவும் அரிதானவை. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் சுயாதீன விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
சம்பவ இடத்தில், வீதியில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன.