ஈரானில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன என்று ஈரானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்கள் ஈரானில் செய்தி வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், நிலவரங்களை உறுதிப்படுத்துவது கடினமாகியுள்ளது.
இந்நிலையில், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் வழியாக தொடர்புகொண்ட சில மருத்துவர்கள், தங்கள் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். தெஹ்ரானில் உள்ள ஃபராபி கண் மருத்துவமனை கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வருவதாக ஒரு மருத்துவர் கூறினார். அவசர நோயாளிகள் அதிகரித்துள்ளதால், அவசரமற்ற சேர்க்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஷிராஸ் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், காயமடைந்தவர்கள் பெருந்தொகையில் கொண்டு வரப்படுவதாகவும், அவர்களில் பலருக்கு தலை மற்றும் கண்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் போதிய அளவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் “பெரிய சிக்கலில்” சிக்கியுள்ளதாகவும், “நாங்களும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குவோம்; எனவே நீங்கள் அதைத் தொடங்கக்கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த ஈரான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த போராட்டங்களை “வன்முறை நாசவேலை” என குறிப்பிட்டு, அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளது.
வியாழக்கிழமை மாலை முதல் ஈரான் முழுவதும் கிட்டத்தட்ட முழுமையான இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பவங்களை சரிபார்ப்பதும், தகவல்களை சேகரிப்பதும் மிகுந்த சிரமமாகியுள்ளது. இரு மனித உரிமைகள் அமைப்புகள், இதுவரை நடந்த போராட்டங்களில் குறைந்தது 217 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளன.