எலான் மஸ்க்கின் எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கருவியான Grok தொடர்பாக, இங்கிலாந்து அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெண்களின் அரை நிர்வாணம் உள்ளிட்ட ஆபாசப் படங்களை உருவாக்க இந்த AI கருவி பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom, Grok AI பயன்பாடு தொடர்பான விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் Grok மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏராளமான ஆபாசப் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டமை, அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி – ஆபாச Deepfake குற்றச்சாட்டில் எலான் மஸ்க்: ‘X’ தளத்தின் Grok AI மீது இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம்
இந்த விசாரணை, இங்கிலாந்தின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றது. சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும், சேவை பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் Ofcom தெரிவித்துள்ளது.