கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகாமின் (UNRWA) தலைமையகத்தை இடிக்கும் பணியை இஸ்ரேலிய குழுவினர் தொடங்கியுள்ளனர். காசா மற்றும் மேற்கு கரையில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான மோதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வழங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
UNRWA, ஹமாஸ் இயக்கத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது என இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள UNRWA தலைமையகத்தை இடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பையே நேரடியாக குறிவைக்கும் செயல் என்றும், இது சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா கண்டனம்
இதற்கிடையில், UNRWA தலைமையக கட்டிடங்கள் இடிக்கப்பட்டதற்கு சவுதி அரேபியா கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களும், சர்வதேச நிவாரண அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்துள்ளது.
மேலும், பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கு சவுதி அரேபியா தனது முழுமையான ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாலஸ்தீன உரிமைகளை ஆதரித்து வரும் சவுதி அரேபியா, 1967ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது.