‘சந்திரா’ (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த சூறாவளி, இன்று (27) இங்கிலாந்தைத் தாக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் ஏற்கெனவே இரண்டு சூறாவளிகள் இங்கிலாந்தை பாதித்துள்ள நிலையில், ‘சந்திரா’ மூன்றாவது பெரிய சூறாவளியாகக் கருதப்படுகிறது.
இதன்தாக்கம் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை வானிலை எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதுடன், கடலோரங்களில் பாரிய அலைகள் எழும் அபாயமும் உள்ளதாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகள் மற்றும் ஸ்கொட்லாந்தில் பலத்த பனிமழை பெய்யும் எனவும் இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘சந்திரா’ புயல் பல பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து ஆற்றல் நிறுவனமான British Gas, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக சில அவசியமான பொருட்களை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மின்சாரம் தடைபடும் சூழல் உருவாகலாம் என்பதால், பேட்டரியில் இயங்கும் டார்ச், உபரி பேட்டரிகள், மொபைல் பவர் பேங்க் ஆகியவை கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பேட்டரியில் இயங்கும் ரேடியோ இருந்தால், அதன்மூலம் நாட்டின் தற்போதைய நிலவரங்களை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எளிதில் கெட்டுப்போகாத உணவுகள், போர்வைகள் மற்றும் அவசர தேவைகளுக்கான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறும் British Gas மக்களை அறிவுறுத்தியுள்ளது. புயல் காலத்தில் ஒளி, தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.