அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யப்பட்டதாக கூறப்படும் பிரேசிலியன் பட் லிஃப்ட் (BBL) சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த ஐந்து குழந்தைகளின் தாய் ஆலிஸ் வெப்பின் மரணம் தொடர்பான குற்ற விசாரணை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முக்கிய சந்தேக நபராக கருதப்பட்ட நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
33 வயதான ஆலிஸ் வெப், 2024 செப்டம்பர் 24 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் அழகுசாதன சிகிச்சை மேற்கொண்டதாக நம்பப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து க்ளோசெஸ்டர்ஷையர் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், “பிரிட்டிஷ் லிப் கிங்” என அறியப்பட்ட Jordan James Parke (34) ஆணவக் கொலை சந்தேகத்தின் பேரில் ஒக்டோபரில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அவர்மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை; பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரும் பின்னர் விடுவிக்கப்பட்டார்; தொடர்ந்து எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஆலிஸ் வெப்பின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அதிகாரியின் விசாரணை தொடரும் என்றும், இரு மரணங்களும் தொடர்பாக தனித்தனி விசாரணைகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், அறுவை சிகிச்சை இல்லாத அழகுசாதன முறைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.