ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரித்தாலும், எவ்வளவு நெருக்கடி அளிக்கப்பட்டாலும் ஈரான் போரில் இங்கிலாந்து தலையிடாது என்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கும் இங்கிலாந்து துணைபோகாது என்று அவர் கூறினார்.
நீரிணை சர்வதேச வர்த்தகத்திற்கான முக்கிய பாதையாக இருப்பதால், அது முழுமையாகத் திறந்திருப்பது அவசியம் என்றும், அதற்காகவே இங்கிலாந்தின் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
நீரிணையில் செல்லும் எல்லாக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், அது சட்டவிரோதச் செயல் என்றும் கடற்கொள்ளைக்குச் சமம் என்றும் ஈரானிய இராணுவம் கூறியது.
ஈரானிய துறைமுகங்கள் அச்சுறுத்தப்பட்டால், மத்திய கிழக்கில் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.