மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக பயணித்த பிரான்ஸ் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம், உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழியின் பாதுகாப்பு மீதான கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, “CMA San Antonio” எனப்படும் சரக்கு கப்பல் நேற்று ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலின் போது கப்பலில் இருந்த ஒரு பணியாளர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை இயக்கும் CMA CGM நிறுவனம், காயமடைந்த பணியாளர் உடனடியாக மீட்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கப்பலின் ஏனைய பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ஹார்முஸ் நீரிணை பகுதியில் சமீபத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு முக்கியமான இந்த பாதையில் எந்தவொரு தாக்குதலும் சர்வதேச வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், இந்த தாக்குதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.