இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் போராடி வரும் நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று அரசாங்கத்தின் அடுத்த ஒரு ஆண்டுக்கான கொள்கை திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளார்.
தலைமைத்துவச் சிக்கல் மற்றும் இராஜினாமாக்கள் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த பெரும் தோல்வியைத் தொடர்ந்து, அமைச்சரவை மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி, சுகாதாரத் துறை அமைச்சர் சுபிர் அகமது உட்பட நான்கு அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமரின் அதிகாரம் “திரும்பப் பெற முடியாத அளவுக்குக் குறைந்துவிட்டது” என்றும், அமைச்சரவை உறுப்பினர்களால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க முடியவில்லை என்றும் சுபிர் அகமது தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிரதமர் ஸ்டார்மர் மிகவும் உறுதியானவர் என்றும், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தனது பணியைத் தொடரப்போவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னரின் உரையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் மன்னரின் உரையில் 35க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் குடிவரவு (Immigration), என்.எச்.எஸ் (NHS) மற்றும் காவல்துறை சீர்திருத்தங்கள், பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை அரசுமயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துதல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குத்தகை சீர்திருத்தங்கள் (Leasehold reforms) முக்கியமானதாக கருதப்படுகிறது.
முன்னதாக 2025 ஜூன் மாதம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நலன்புரி சீர்திருத்தங்களை (Welfare reform) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இந்த உரையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரதமர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ள முதல் சந்தர்ப்பம் இது என்பதால், இன்றைய நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.