இங்கிலாந்தில் ஆட்கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றச்செயல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக National Crime Agency எனப்படும் தேசிய குற்றவியல் முகமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும், இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளை இணைத்துப் பார்க்கும்போது மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே காலப்பகுதியில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கைது எண்ணிக்கை 190ஆக இருந்த நிலையில், இம்முறை ஏற்பட்டுள்ள உயர்வு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக சட்டவிரோத குடியேற்ற வலையமைப்புகள் மற்றும் மனிதர்களை கடத்தும் குற்றக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணமாக, தேசிய குற்றவியல் முகமைக்கு வழங்கப்பட்ட கூடுதல் வளங்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையின் விரிவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகமான விசாரணை அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகள் பல நாடுகளை இணைக்கும் சர்வதேச குற்ற வலையமைப்புகளால் முன்னெடுக்கப்படுவதால், வெளிநாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுடனும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.