யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் வைத்து இன்று (25) காலை தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்தார்.
46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு, கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அந்த தீர்ப்பை ஆராய்ந்த கொழும்பு நீதிமன்றம், யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன்படி, நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதி இன்று அதிகாலை தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.