இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய இராணுவப் பிரிவுத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பல மாதங்களாக சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவராக Mohammed Odeh கருதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சந்தைப் பகுதியை அண்மித்த இடத்தில் இந்த வான்தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் போது Mohammed Odeh உட்பட மேலும் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட மற்றொரு தாக்குதலில் ஹமாஸ் இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கே Mohammed Odeh சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவ அமைப்பில் மீண்டும் அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற பகுதி காசா நகரின் மையப்பகுதியாகும். தாக்குதலால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சுற்றுவட்டார குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, காசா பகுதியில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.