லெய்செஸ்டரில் (Leicester) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியானமை தொடர்பில் லெஸ்டர்ஷைர் (Leicestershire) பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமை இரவு சுமார் 10:45 மணியளவில், இலண்டன் வீதியின் சாக்ஸ்பி (Saxby) தெரு அருகே சென்றுகொண்டிருந்த பொலிஸ் வாகனத்தை ஒரு இளைஞன் தடுத்து நிறுத்தினார். அப்போது அவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் மிகக் கடுமையான காயங்கள் இருந்தன. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இலண்டன் வீதியின் பின்னால் அமைந்துள்ள ‘டி மான்ட்ஃபோர்ட் பிளேஸ்’ (De Montfort Place) பகுதியில் இந்தக் கத்திக்குத்து நடந்திருக்கலாம் என்று பொலிஸ் நம்புகிறது. தற்போது அந்தப் பகுதியில் தடயவியல் நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருவதால், அந்த இடம் பொலிஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. புதன்கிழமை இரவு 10:45 முதல் 11:00 மணி வரை இலண்டன் வீதிப் பகுதியில் இருந்த சி.சி.ரி.வி காட்சிகள் அல்லது வாகன கேமரா பதிவுகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு, அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழுமையான விவரங்களைச் சேகரிக்கவும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணவும் லெஸ்டர்ஷைர் பொலிஸ் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக முதன்மை குற்றப்பிரிவு ஆய்வாளர் லோர்னா கிரான்வில் தெரிவித்துள்ளார்.