தனியாக வீட்டில் இருந்த முதியோரைக் குறிவைத்து வீடு புகுந்து அரிவாள் முனையில் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்களிடம் முதிய தம்பதி போராடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கொள்ளையர்களை விரட்டியடிக்கும் கணவன்- மனைவி
நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கிராமம் கல்யாணிபுரம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சண்முகவேலு. அவரின் மனைவி செந்தாமரை. இவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஐ.டி நிறுவனங்களில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் வசித்துவருகின்றனர். விவசாயியான சண்முகவேலுவும் அவரின் மனைவி செந்தாமரையும் தங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இயற்கையான முறையில் விவசாயம் செய்துவருகின்றனர். நேற்று இரவு தன் மகனுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் சண்முகவேலு. வீட்டின் வெளியில் சேரில் அமர்ந்து அவர் பேசிக்கொணன்டிருந்தபோது வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் இருவர் அரிவாளுடன் வந்துள்ளனர்.
அவர்கள் வந்தது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த சண்முகவேலுவின் கழுத்தை துண்டால் பின்னால் இருந்து நெரித்ததால் பதறிப்போன அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது அவரின் மனைவி செந்தாமரை வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அங்கே இருவர் முகமூடி அணிந்தநிலையில், கையில் அரிவாளுடன் இருந்தவர்களுடன் கணவர் போராடியதைக் கண்டு அதிர்ந்தார். அதனால் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு கொள்ளையரை செந்தாமரை தாக்கினார்.
இதில் கொள்ளையர்கள் நிலைகுலைந்தனர். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேலு தப்பினார். ஆனாலும் கொள்ளையர்கள் இருவரும், இவர்களை அரிவாளால் தாக்க முயன்றனர். கடுமையாக கணவனும் மனைவியும் போராடியபோதிலும் செந்தாமரை கைகளில் வெட்டிய முகமூடிக் கொள்ளையர், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இந்தச் சம்பவம் அவர்கள் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து கடையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர். அந்த சிசிடிவி காட்சியில் உள்ளவர்களைப் போன்ற பாவனைகள் மற்றும் செய்கைகளைக் கொண்டோரை அடையாளம் கண்டால் கடையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
https://www.facebook.com/JuniorVikatan/videos/653831911694083/?t=0