கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.