இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாராளுமன்ற மக்களவை (லோக்சபா) செயலகம் அறிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள நீதிமன்றமொன்று நேற்று தீர்ப்பளித்தது.
அதையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவையின் செயலகம் இன்று தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மேன்முறையீடு செய்வறத்கு ஏதுவாக 30 ஆ திகதி வரை பிணை வழங்கப்பட்டது,
இந்நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.