இலண்டன் முழுவதும் காப்பீடு இல்லாமல் வாகனங்களை செலுத்துதல் மற்றும் சமூக விரோதமான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான பெறுமதியுடைய 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த நடவடிக்கையின் போது சுமார் 3.7 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரிய Ferrari Monza SP2 சொகுசுக் காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
120 பொலிஸார் பங்கேற்பு
முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்தச் விசேட நடவடிக்கையில் சுமார் 120 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலண்டனின் முக்கிய பகுதிகளான Hyde Park, Kensington மற்றும் Chelsea உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன.
காப்பீடு இல்லாத வாகனங்கள், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் வாகனங்கள் இந்த நடவடிக்கையின் போது இலக்காகக் கொள்ளப்பட்டன.
புதிய அதிகாரங்களின் கீழ் நடவடிக்கை
சமூக விரோத வாகன ஓட்டுதலை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அதிகாரங்களின் கீழ், சமூக விரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் வாகனங்களை முன்னறிவிப்பு இன்றியே உடனடியாக பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சட்டவிரோதமான முறையில் வாகனங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
அரிய Ferrari காரும் சிக்கியது
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தது Ferrari Monza SP2 ஆகும்.
சுமார் £3.7 மில்லியன் பெறுமதியுடையதாகக் கூறப்படும் இந்த அரிய சொகுசு கார், உலகில் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஒன்றாகும்.
இந்த காருடன் மேலும் 15 வாகனங்கள் குறிப்பிட்ட சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 90 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சொகுசு கார்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை
இலண்டனில் விலையுயர்ந்த மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சமூக விரோத வாகன ஓட்டுதலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் சட்டவிரோதமான வாகனப் பயன்பாட்டை தடுப்பதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.