கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக்கொண்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த மருத்துவபீட மாணவன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாணவனின் தந்தையான கே. சின்னத்தம்பி தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் (வயது – 21) என்ற மருத்துவபீட மாணவனே காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கடந்த வருடம் ஜனவரி 23ஆம் திகதியே குறித்த மாணவன் சென்றுள்ளார்.
இரண்டாம் வருடம் கல்வி பயின்று கொண்டிருந்த அவர் இம்மாதம் 10ஆம் திகதி கோயிலுக்குச் செல்வதாக சக நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி வரை அவர் வராததன் காரணமாக அவருடைய நண்பர் ஒருவர் அம்மாணவனின் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி – மோகன்ராஜுக்கு வேறு தொலைபேசி இலக்கம் ஏதும் உள்ளதா என வினவியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட வீட்டார் குறித்த மாணவனின் தொலைபேசிக்குப் பல தடவைகள் அழைப்பு எடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு உறவினருடன் குறித்த மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல்போன மாணவனைத் தேடிச் சென்ற தாயார் தற்போது சுகயீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
குறித்த மாணவன் கோயிலுக்குச் சென்று வருவது வழமை எனவும், மாணவனின் தொலைபேசியிலிருந்து இறுதியாக மன்னார் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அழைப்புச் சென்றுள்ளது எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, மாணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.