0
கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று இடம்பெற்றது. நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பில் குறித்த விசேட அமர்வு இடம்பெற்றதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிதன் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இன்றைய அமர்வில் கரைச்சி பிரதேச சபை ஆழுகையில் உள்ள நூலகங்களில் பத்திரிகை பார்வையிடும் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் மூடப்படவும், பூங்காவை மூடுவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்கள் மற்றும் பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்களால் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு கைகளை கழுவும் வகையில் அமைவிடங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதுடன் இவற்றுக்காக 1.5 மில்லியன் சபையால் விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதுபான விற்பனை நிலையங்களில் அமர்ந்து மது அருந்துவதை தவிர்க்கவும், விரும்பினால் பெற்றுச்செல்லும் வகையிலும் உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளதாகவும், விடுதிகளில் தங்கியிருப்போர் தொடர்பில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி நகர் சேவைச் சந்தைக்கு வெளிநாட்டவர்கள்,வெளி இடங்களை சேர்ந்தவர்கள் வருகை தருவதால் பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதை தவிர்க்குமாறும் தேவையற்ற கூடுகையை தவிர்க்கும் வகையில் அருகில் உள்ள உள்ளூர் சந்தைகளை நாடுமாறும் தவிசாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விளையாட்டு கழகங்களில் உள்ள இளைஞர்கள் தமது பொழுது போக்கிற்காக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகை விடுக்கப்பட்டுள்ளதாகவும்,
தொழிற்சாலைகளில் பணிபுரிவது தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களிற்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இயலுமானவரை மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும், மரண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் உரிய நேரங்களில் கலந்துகொண்டு பாதுகாப்பாக செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ வசதி குறைவான பின்தங்கிய பிரதேசங்களில் நோய் தொற்றுக்கு உள்ளாவதை தவிர்ப்பதே பொருத்தமான நடவடிக்கை எனவும் பாதுகாப்பாக செயற்படுமாறும் தெரிவித்தார்.