கொவிட்19 தொற்று பரவல் காரணமாக இவ்வருட இறுதிக்குள் எதிர்பார்த்த 06 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீட்சிக்கான செயற்திட்டங்கள் மூலம் 2021 ஆம் ஆண்டு முடிவில்
5 -தொடக்கம் 5.5 சதவீதம் வரையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் இறையாண்மைக்கும் சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாதென்றும் சுட்டிக்காட்டிய அவர், அவ்வரிச்சலுகை நீக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பாரியதொரு சேதம் ஏற்படாதென்றும் அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மேலும் கூறுகையில் ,
நாட்டில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் காலப்பகுதியிலும் மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடும் என்றுதான் கூறப்பட்டது.
இது தற்போது புதிதாகக் கூறப்படுகின்ற விடயமல்ல. எமது அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து பல்வேறு தரப்பினராலும் இவ்வாறு கூறப்பட்டுவருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித நெருக்கடிகளும் இல்லை என்று நான் கூறவில்லை. அதில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடையப் போவதாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலராலும் கூறப்படும் விடயங்கள் அரசியல் கோணத்தை மையப்படுத்தியவையாகும். பொருளாதாரத்தில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் கூறுகின்ற எந்தவொரு தரப்பினரும் அதற்கான தீர்வுகளைக்கூற முன்வரவில்லை.
கொரோனா தொற்றுப் வைரஸ் பரவல் காரணமாக எமது நாடு மாத்திரமன்றி உலகின் அநேக நாடுகள் பலகாலம் தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்தன. அதனால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்கின்ற பல்வேறு துறைகளும் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஆகவே இவ்விடயத்தைப் பொறுத்தவரையில், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் பிரச்சினைகளை மாத்திரமே சுட்டிக்காட்டுவதையும் விடுத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.