December 10, 2023 12:07 am

பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச டி.ரி.என்.ஏ. முடிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனவும், அதற்கு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைக் கோருவது எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டி.ரி.என்.ஏ.) தீர்மானித்துள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மன்னாரில் நடைபெற்றபோதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொது வேட்பாளர் விடயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைக் கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்  மன்னாரில் அமைந்துள்ள ரெலோவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் ரெலோ சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா.துரைரரெட்ணம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.ராகவன், தமிழ்த் தேசியக்  கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி, கட்சியின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணியைப் பலப்படுத்தல், சமகால அரசியல் பிரச்சினைகள், ஜனாதிபதி பொது வேட்பாளர், மயிலத்தமடு பண்ணையாளர்கள் பிரச்சினை, மன்னாரில் காணிகள் அபகரிப்பு, மீன் இறக்குமதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்