செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் | இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் | இராமலிங்கம் சந்திரசேகர்

1 minutes read

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன்கிழமை (13) காணி உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்,

காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கில் இருந்தே ஆரம்பித்துள்ளோம். வடக்கு மக்களின் வாழ்வில் என்றைக்கு வசந்தம் துளிர்விடுகின்றதோ அன்றுதான் எமது வாழ்விலும் வசந்தம் ஏற்படும். ஏனெனில், இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

சுமந்திரனுக்கு ரணிலுடன் இருக்கும்போது நல்லது. யாழ். நூலகத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்கு தெரியவரவில்லை. ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

மட்டக்களப்பில் 10, 15 பேரை அழைத்து சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியில் இருந்தவர் ஆவார்.

கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணி மற்றும் விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

‘மன்னாரில் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள கனிய மணல் அகழ்வு இடம்பெறுகின்றதாம். இதனால் மக்களின் காணிகள் சூறையாடப்படப்போகின்றதாம்’ என ரிஷாட் பதியுதீன் கூறுகின்றார்.

காற்றாலை மின் உற்பத்திக்கு கடந்த காலங்களில் இந்த பாவிகள்தான் காணி வழங்கினார்கள். அதற்குரிய அனுமதியையும் இந்த பாவிகளே வழங்கினர். கனிய மணல் அகழ்வுக்கும் ராஜபக்ஷ, ரணில் ஆட்சியில் அமைச்சராக இருந்த பாவிகள்தான் அனுமதி வழங்கினர் எனவும் அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.