செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

1 minutes read

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன் குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

குறிப்பாக கடந்தகாலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரிதின வழிபாடுகளில் பொலிசாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுவந்தன.

இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த வெள்ளிக்கிழமை (13)  இடம்பெற்ற வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னிமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் வெடுக்குநாறி மலை உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பூசைவழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அங்கு சிவராத்திரிதின கலைநிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

மேலும் குறித்த ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதற்காக ஆலய நிர்வாகத்தினரால் உழவியந்திரங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் பெருத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான பக்தர்கள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததுடன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், தர்மலிங்கம் சுசீலன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் ச.தவேந்திரராசா, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் பூபலசிங்கம், செயலாளர் ச.வசந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய உழவியந்திரங்கள் புதையுண்டதுடன், ஆலயத்திற்கு குடிநீர் தாங்கியை எடுத்து வந்த உழவியந்திரமும் புதையுண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கான வீதிச்சீரமைப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஆலயத்திற்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிகளை ஊடறுத்துச்செல்வதால் வனவளத்திணைக்களத்தின் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதாகவும், அதற்கமைய அனுமதிகளைப் பெற்று வீதியை சீரமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.

மேலும், குறித்த சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறும்போது வெடுக்குநாறிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.