செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்துக்களின் பெருஞ்சமர் | மீண்டும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சமர்!

இந்துக்களின் பெருஞ்சமர் | மீண்டும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சமர்!

2 minutes read

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15வது “ஜனசக்தி லைஃப் இந்துக்களின் பெருஞ்சமர்” (Battle of the Hindus) மாபெரும் கிரிக்கெட் போட்டி மீண்டும் களைகட்டவுள்ளது.

இம்முறை போட்டியை நடத்தும் கொழும்பு இந்து கல்லூரி தனது 75வது ஆண்டு நிறைவை (பவள விழா) கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இப்போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு பி.சரா ஓவல் (P. Sara Oval) சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இப்போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (Janashakthi Insurance PLC) தலைமை அனுசரணை வழங்குகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, இலங்கையர்களின் கனவுகளை நனவாக்குவதே தமது நோக்கம் என்றும், இளம் சந்ததியினரின் ஆளுமையை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் Avenierr Pharma, Star Gold, 747 Auto Parts, IDMNC International மற்றும் Mode Engineering ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிக்கு தமது ஆதரவை வழங்குகின்றன.

இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவில் இந்த பெருஞ்சமர் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இரு கல்லூரிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கத்தையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்கவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் அதிபர் ரத்னம் செந்தில்மாறன் தனது வாழ்த்துச் செய்தியில், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதரவளிக்கும் ஜனசக்தி நிறுவனத்திற்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இம்முறை போட்டியில் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் களமிறங்கும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கு முத்துக்குமார் அபிஷேக் உப தலைவராகவும், சுரேஷ் குமார் மிதுஷேகன் விக்கெட் காப்பாளராகவும் செயற்படுகின்றனர். இவர்களுடன் திவாகரன் யாதவ், விஸ்வநாதன் யுவராஜ், செந்தில்குமார் ஹர்ஷ மிதுமின, தவக்குமார் சந்தோஷ், ரஞ்சித் குமார் அகிலேஷ், சுரேஷ் சர்விஷ், கோடீஸ்வரன் யசூர்ஜன், கோபாலகிருஷ்ணன் தூயவன், சத்திய சீலன் சபேஷன், சௌந்தரராஜன் ஆகாஷ், ரவிராஜா தக்ஷேஸ், சசிகுமார் சதுர்ஷன் மற்றும் வெள்ளத்துரை அபினேஷ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவ்வணிக்கு எஸ். கோபிநாத் பயிற்சியாளராகவும், கே. ரஜீவ்காந்த் பொறுப்பாசிரியராகவும் (Master in Charge) செயற்படுகின்றனர்.

மறுபுறம், எஸ். சுபர்ணன் தலைமையில் களமிறங்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எஸ். ஹரிகரன் உப தலைவராகவும், ஆர். ஆதித்யன் விக்கெட் காப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். அணியின் ஏனைய வீரர்களாக எஸ். செல்வேஜன், கே. நித்தீஸ், டி. பிரேமிகன், ஜே. பவனன், என். நேருஜன், எஸ். அபிவர்ணன், எம். டானிலாஷ், கே. துவாரகன், எஸ். அஸ்வின், பி. அனிஷ், எஸ். சிவகஜீசன், டி. பிரீத்திகன் மற்றும் ஜி. லக்ஸிகன் ஆகியோர் களம் காண்கின்றனர். இவ்வணிக்கு எஸ். அலன்ராஜ் பயிற்சியாளராகவும், டி. தயாபாலன் பொறுப்பாசிரியராகவும் வழிகாட்டுகின்றனர்.

பழமை வாய்ந்த இந்த இரு கல்வி நிறுவனங்களின் கௌரவத்திற்காக நடைபெறும் இப்போட்டியைக் கண்டுகளிக்க பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.