செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது | முஜிபுர் ரஹ்மான் சாடல்

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது | முஜிபுர் ரஹ்மான் சாடல்

1 minutes read

எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வதற்கு முன்னரே இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பழைய கையிருப்புகளை, தற்போதைய விலை ஏற்றத்தைக் காட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வது ஒரு பாரிய குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பானது நாட்டின் பணவீக்கத்தை உயர்த்துவதோடு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் பாரியளவில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், மின் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையையும் அரசாங்கம் அதிகரித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் கையிருப்பு போதியளவு இருப்பதாகவும், விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அதற்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒரு கொள்கையைப் பின்பற்றிய ஜனாதிபதி, தற்போது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கேள்விகளையே பதிலாகக் கேட்கும் ‘பிளாட்’ (Flat Theory) நியதியைப் பின்பற்றி உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கப் பார்க்கிறார் என்றும் அவர் சாடினார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலை ஒரு சாட்டாகப் பயன்படுத்தி மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தும் அரசாங்கம், உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை மக்களுக்கு வழங்கவில்லை என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

மேலும், மத்திய கிழக்கு போர் எப்போது முடியும் என்று சாதாரண மக்களிடம் கேட்காமல், ஜனாதிபதி தன்னை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய ஜூலி சாங் மற்றும் தனது புதிய நண்பரான பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரிடமே அது குறித்துக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்த ரஹ்மான், ஜனாதிபதி புலம்புவதை நிறுத்திவிட்டு மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு முன்னதாக மார்க்ஸ் மற்றும் லெனின் கொள்கைகளைப் பேசிய தேசிய மக்கள் சக்தி, தற்போது ‘போல் பொட்’ முறையிலான அடக்குமுறைப் பொருளாதாரக் கொள்கைகளையே முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான அநீதியான வரி மற்றும் விலை அதிகரிப்புகளுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மக்களைத் திரட்டி மிக விரைவில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தனது உரையில் எச்சரிக்கை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.