செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? | சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? | சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

2 minutes read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா? என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இல்  கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடியினால் மின்உற்பத்தி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் மூலம் ஆபத்தான பொருளாதார நெருக்கடி உருவானது. இந்நிகழ்வுகளிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டனவா என்பதை, தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் பின்னணியில் குறிப்பாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் வலுச்சக்தி பாதுகாப்பு  தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த சபைக்கு விளக்கம் அளிக்குமாறு   அமைச்சரிடம் கோருகிறேன்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா?

தற்போது நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு எவ்வளவு? அது இன்னும் எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக காணப்படுகின்றன? அவசர தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய பெற்றோலிய கையிருப்பை இலங்கை பேணி வருகிறதா? அவ்வாறானால் அதன் அளவு என்ன? உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைப்படும் அல்லது விலைகள் சடுதியாக அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்கு வலுச்சக்தி அமைச்சு பின்பற்றும் அவசரகால முகாமைத்துவத் திட்டம் யாது?

உலக சந்தையில் எண்ணெய் விலை 20% முதல் 30% வரை அதிகரிப்பு ஏற்பட்டால், அது நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் மற்றும் தேசிய பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து வலுச்சக்தி அமைச்சு கணக்கீடொன்றை மேற்கொண்டுள்ளதா?  மத்திய கிழக்கு பிராந்தியம் சார்ந்த சர்வதேச கடல் வழித் தடங்களுக்கு இடையூறு ஏற்படுவதால் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் மாற்று வலுச் சக்தி போக்குவரத்து வழித்தடங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடு எதனையும் மேற்கொண்டுள்ளதா?

2026.03.15 முதல் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு விஞ்ஞான பூர்வ அடிப்படையாக கொண்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன? இந்த ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதில்லை என்று வலுச்சக்தி அமைச்சு ஏற்றுக்கொள்கின்றதா? அப்படியானால், அந்த ஒதுக்கீட்டை திருத்தியமைக்க வேண்டாமா?

எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இது போன்ற தருணத்தில் மின்உற்பத்தி, சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள தேசிய முன்னுரிமை பொறிமுறை யாது ?

அமெரிக்கா ரஷ்யாவிற்கு விதித்திருந்த எண்ணெய் தடைகளுக்கு வழங்கிய 30 நாள் தற்காலிக விலக்கு காரணமாக, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது நாட்டிற்குத் தேவையான மசகு எண்ணெய் உள்ளிட்ட பெற்றோலியப் பொருட்களைப் பெறுவதற்கான விசேட செயற்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் அவசர தீர்மானத்தை எடுக்காமைக்கான காரணம் என்ன?

சர்வதேச வலுச்சக்தி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட உடன்பாடு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.இ.ஏ. உடன் நமது நாட்டிற்குத் தேவையான எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளனவா? எனக்கேட்கிறேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.